பிரதமர் நரேந்திர மோடி 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயணத்தின்போது அவர் 4 மாநிலங்களிலும் ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7-ந்தேதி காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்கிறார். அப்போது நிறைவு பெற்ற சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன் பின்னர் கோரக்பூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் வாரணாசி-ஜான்பூர் 4 வழிப்பாதை விரிவாக்கத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி வாரங்கலில் இருந்து ராஜஸ்தானின் பிகானேர் நகருக்கு செல்கிறார். அங்கு அடிக்கல் நாட்டி பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் பிகானேரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். உத்தரபிரதேசம் தவிர மற்ற 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.