பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வரும் 'பரீட்சா பே சர்ச்சா' எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 27ல் புதுடில்லியில் நடக்கிறது.
மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கும் வகையில், பிரதமர் மோடி 2018 முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஆறாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி, புதுடில்லி டால்கடோரா விளையாட்டு மைதானத்தில் வரும் 27ல் நடக்க உள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தேர்வுகள் குறித்து மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்பர். இதில் பங்கேற்பதற்காக 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இதன்படி, 31.24 லட்சம் மாணவர் உட்பட 38.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், 51 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், 50 நாடுகளைச் சேர்ந்த பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.