போலந்து பிரதமராக டொனால்ட் டஸ்க் நேற்று பதவி ஏற்றார்.
போலந்து நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியில் இருந்த லா அண்ட் ஜஸ்ட் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் டொனால்ட் டஸ்க் தலைமையிலான சிவில் பிளாட்பார்ம் கட்சி ஆட்சி அமைக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் அந்த அரசு வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று தலைநகர் வார்சாவிலுள்ள அதிபர் மாளிகையில் டொனால்ட் டஸ்க் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் ஏற்கனவே 2007 முதல் 2014 வரை பிரதமராக பதவி வகித்துள்ளார். இவர் ஐரோப்பிய யூனியன் ஆதரவாளராக உள்ளார்.