தென் ஆப்பிரிக்காவில் பிரபல ராப் பாடகர் கீர்னன் போர்ப்ஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் பாடகர்களில் ஒருவர் கீர்னன் போர்ப்ஸ். ஏகேஏ என அழைக்கப்படும் இவர் ஏராளமான ராப் பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் ஏகேஏ தனது நண்பரும், மேலாளருமான மோட்சோனேவுடன் டர்பன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஏகேஏ மற்றும் அவரது நண்பரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே ராப் பாடகர் ஏகேஏ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.














