கொரோனாவுக்கு பிறகு கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளதால் டெல்லியில் 30 மடங்கு வெப்பம் உயர்ந்துள்ளது.
உலக பருவநிலை தொடர்பாக உலக வானிலை மையம் ‘யுனைடெட் இன் சயின்ஸ்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பருவநிலை மாற்றம் காரணமாக டெல்லியில் வெப்பநிலை 30 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் 5 வெப்ப அலைகள் பதிவாகி, அதிகபட்ச வெப்பநிலை 49.2 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்தது. இதனால் டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் உலகம் முழுவதும் வானிலை தொடர்பான பேரழிவுகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 115 பேர் பலியாகி உள்ளனர். தினசரி ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக குறைந்திருந்த கார்பன் உமிழ்வு, தற்போது பலமடங்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே உலகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறான மழை, பெரு வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.