மாண்டஸ் புயல் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட பகுதிகளில் இன்று மதியத்திற்குள் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாகக் கரையைக் கடந்தது. புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
புயலால் சேதம் அடைந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்து அதன்பின் மின்விநியோகம் வழங்கப்படும். இன்று மதியத்திற்குள் 100 %முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 11,000 பணியாளர்கள் மற்றும் சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.