தாய்மொழி கல்வி மூலம் தான் எளிதாக கற்று கொள்ள முடியும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக ஒடிசாவுக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது, உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்றார். நேற்று கந்தகிரியில் தான் படித்த அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 1970 - 74 வரை கந்தகிரி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.
அப்போது பள்ளி ஓலைக்குடிசையாக இருந்தது. வகுப்பறையின் மண் தரையை மாட்டுச் சாணம் பூசி மெழுகும் வேலையை மாணவியர் தான் செய்வோம். இப்போது பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இணையதள வசதியெல்லாம்கூட இருக்கிறது. இதை பயன்படுத்தி மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்றார். மேலும், கல்வி தான் அதிகாரத்தை பெற்றுத் தரும். அதிலும் தாய்மொழியில் கல்வி கற்றால் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். தாய்மொழி வாயிலாகத்தான் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்றார்.