துருக்கியில் வருகிற மே மாதம் 14-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது.
துருக்கியில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர். நில நடுக்கத்தில் இருந்து அந்த நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த நாடு பொது தேர்தலை சந்திக்க இருக்கிறது. வருகிற மே மாதம் 14-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கி உள்ளது.
முதல் கட்டமாக நிலநடுக்கத்தால் பெரிதும் உருக்குலைந்த 10 மாகாணங்களில் இந்த பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் மீண்டும் வெல்வாரா என்ற கேள்விக்குறி உள்ளது. ஏனென்றால் நிலநடுக்கத்தின்போது அவர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் செல்லவில்லை என்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இந்த தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும் என எர்டோகன் நம்பிக்கையுடன் உள்ளார். நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு பதில் புதிதாக சிறந்த கட்டிடங்களை கட்டி கொடுக்க இருப்பதாக எர்டோகன் தெரிவித்து உள்ளார்.