பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய ஆசிய நாடுகளின் மாநாட்டில் அஜித் தோவல் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற முதல் மாநாடு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அஜித் தோவல், நிதியுதவி என்பது பயங்கரவாதத்தின் உயிர்நாடி. பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவது நம் அனைவருக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும். எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ள நிலையில் நமது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைதியான, பாதுகாப்பான, வளமான பகுதியாக மத்திய ஆசியா திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் என்று கூறினார்.