வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் குவாஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குவாஹாத்தியில் ரூ.1,123 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். இது வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும். அசாமின் நல்பாரி, நகாவோன், கோகராஜ்ஹர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளையும் அவர் திறந்து வைத்தார். மேலும் ரூ.14,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.














