நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி இன்று காட்டில் விடுகிறார்.
இதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எஸ்.பி.யாதவ் கூறுகையில், மத்திய பிரதேச மாநிலம் சியோபூரில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபிய நாட்டு சிறுத்தைகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடமாட உள்ளன.
நமீபியாவிலிருந்து சிறுத்தைகளை அழைத்து வருவதற்காக சிறப்பு சரக்கு விமானம் போயிங் 747 அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானத்தில் வனவிலங்கு நிபுணர்கள், கால்நடை மருத்துவர், மூன்று இந்திய விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நமீபியாவிலிருந்து நேற்று மாலை கிளம்பிய சிறப்பு விமானம் இடையில் எங்கும் நில்லாமல் நேரடியாக குவாலியரை இன்று வந்தடைகிறது.
நரேந்திர மோடியின் பிறந்தாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நமீபியா சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவிற்கு பிரதமர் அறிமுகம் செய்து வைப்பார். இந்த சிறுத்தை உலகில் மிக வேகமாக மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தையாகும். இவற்றின் அழகிய வாழ்விடமாக குனோ தேசிய பூங்கா திகழும். விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக இந்த பூங்காவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சிறப்பான வகையில் செய்யப்பட்டுள்ளன.
ரேடியோ காலர் பொருத்தி சிறுத்தைகளின் நடமாட்டம் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.














