ஊழல் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த போராட்டங்களால், நேபாளப் பிரதமர் பதவி விலகியுள்ளார்.
நேபாளத்தில் நிலவி வந்த ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான தடை ஆகியவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதால், கலவரங்கள் தீவிரமடைந்தன. இதில் 19 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கப்பட்டது. இருப்பினும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரினர். இதன் காரணமாக பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. நேபாள உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73), இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதே நேரத்தில், அந்நாட்டு நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் 21 அன்று தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடெல் அறிவித்துள்ளார்.