தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் காப்பீட்டுத் தொகையில் மருந்து கொள்முதல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, தமிழ்நாடு மருத்துவக் கழகம் மூலம் மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்து அனுப்பப்படுகின்றன. சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், உயிர் காக்கும் மருந்துகள் உட்பட அனைத்து வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது தமிழ்நாடு மருத்துவக் கழகத்திடம் 10 மருந்துகள் கேட்டால், 2 மட்டுமே அனுப்புகின்றனர். அதனால், நாங்களே உள்ளூரில் ஒப்பந்தம் செய்து மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்கிறோம். மருத்துவக் கழகத்திடம் மருந்துகளை கொள்முதல் செய்தால் சலுகை கிடைக்கும். உள்ளூரில் கொள்முதல் செய்வதால் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது.
இந்த மருந்துகளை வாங்க, அரசு தனியாக நிதி வழங்குவதில்லை. காப்பீட்டுத் தொகையை செலவிடும்படி கூறியுள்ளனர். காப்பீட்டுத் தொகையில்தான் மருத்துவமனைகளில் நிறைய பணிகள் நடைபெற்றன. இதனால் மருத்துவமனைகளில் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கின்றன. எனினும், காப்பீட்டுத் தொகையை வைத்து, மருந்து தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.