உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது சாதாரணமான சாதனை அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
குஜராத் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: காலனி ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 75-வது பெருவிழா ஆண்டில் இந்தியா, பிரிட்டனை விஞ்சி உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமான சாதனை அல்ல. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்.
உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. உலகின் 5-வதுபெரிய பொருளாதார நாடு என்ற சாதனை நாம் மேலும் கடினமாக உழைக்கவும், பெரிய இலக்குகளை அடையவும் நம்பிக்கை அளித்துள்ளது.