மின் கட்டண உயர்வு மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
மின் கட்டண உயர்வு குறித்து சில தொழிற்சங்க நிர்வாகங்கள் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழகத்தில் மின் கட்டண உயர்விற்கு அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. அது தொடர்பாக தற்போது மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது.
மேலும், ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதில், தொழில்நுட்பம் சார்ந்த ஒரு உறுப்பினர், சட்டம் சார்ந்த ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும். ஆனால் தமிழக அரசு சட்டம் சார்ந்த உறுப்பினரை நியமிக்கவில்லை. அப்பதவியை நிரப்பும் வரை கட்டண உயர்வு தொடர்பான முடிவுகளை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது உயர்நீதிமன்றத்தின் கடமை. ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு உறுப்பினரை நியமிக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.
மேலும் சட்டம் சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, கட்டண மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க ஆணையத்திற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.