தமிழக முன்னேற்றத்திற்கான முத்திரை திட்டங்களை 5 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் செயலாக்கத்தில் காணப்படும் சில சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து இருக்கிறோம். கடந்த ஆய்வு கூட்டத்துடன் இந்த கூட்டத்தை ஒப்பிடும்போது பெரும்பாலான திட்டங்களில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப்படுகிறது.
இத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்படாவிட்டால் அவற்றின் முன்னேற்றம் பருவமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் மிகவும் பாதிக்கப்படும். திட்டங்களை விரைந்து முடிக்க வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களே வாய்ப்பான காலமாக உள்ளது. எனவே, சரியான திட்டமிடுதலுடனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.