எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை உயர்த்த சட்டசபையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பளம் கடந்த 2010ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இதர படிகள் சில உயர்த்தப்பட்டாலும், சம்பளம் உயர்த்தப்படவில்லை. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் எம்.எல்.ஏ.,க்களின் அடிப்படை ஊதியம் 8 ஆயிரமாக உள்ளது. அனைத்து இதர படிகளையும் சேர்த்து மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். இதனை 1,05,000 ரூபாய் சம்பளமாக உயர்த்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து விவாதிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., க்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தை, 50 ஆயிரமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பரிந்துரை குறித்து முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றபின் முடிவுகள் அறிவிக்கப்படும்.