வருகிற 30-ந்தேதி காலை 6.30 மணிக்கு முதல் ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்- சாட்' என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதனுடன், மேலும் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட், ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட 'சி-55' ராக்கெட் போன்று 'கோர்-அலோன்' என்ற நவீன பயன்பாட்டு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த 'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு ஏஜென்சிகளின் செயற்கைக்கோள் பட தேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. அத்துடன் எஸ்.டி. என்ஜினீயரிங் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மல்டி-மாடல் மற்றும் துல்லியமாக பெறக்கூடிய படங்கள் மற்றும் 'ஜியோஸ்பேஷியல்' என்ற தொழில்நுட்ப துறைக்கு இதைப் பயன்படுத்த முடியும்.
'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் ஆனது 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கைத் துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலை தகவல்களை பகல் மற்றும் இரவு நேரங்களில் வழங்க முடியும். துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டதாகும். 23 கிலோ எடை கொண்ட 'விலேக்ஸ்- ஏஎம்' என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், 'ஆர்கேட்' என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், 'எக்ஸ்ப்ளோரர்' என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், 'ஸ்கூப்-2' என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் 6 செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.