இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, எந்தவித விண்வெளி குப்பைகளும் இல்லாமல் பிஎஸ்எல்வி ராக்கெட் மீண்டும் பூமிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸ்போ சாட் திட்டத்தின் பகுதியாக போயம் 3 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. செயற்கைக்கோளை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் ஆனது செயற்கைக்கோள்களை நிறுவிய பிறகு போயம் 3 என்ற இறுதி கட்டத்தை எட்டியது. இந்தக் கட்டத்தில், அதில் உள்ள சுமை பாகங்களை இஸ்ரோ முறையாக நிர்வகித்தது. இந்தக் கட்டத்தில் பல்வேறு விண்வெளி ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த பாகத்தின் சுற்றுவட்ட பாதை தொலைவு குறைக்கப்பட்டு மீண்டும் பூமிக்குள் கொண்டு வரச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பூமிக்கு நெருக்கமாக வரும் வரையில் இஸ்ரோ அதனை கண்காணித்து வந்தது. கடந்த மார்ச் 21 காலை வரை அதன் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, எந்த வித விண்வெளி குப்பைகளும் ஏற்படாமல் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கான முன்மாதிரியாக திகழ்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.