பொது பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்குவதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறுகிறது.
செப்டம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், செப்டம்பர் 25 முதல் 27 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 13 முதல் 15 வரை 3ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 29 முதல் 31 வரை 4ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும். நவம்பர் 15 முதல் 17 ஆம் தேதி இணையதளம் வாயிலாக துணை கலந்தாய்வு நடைபெறும். ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் பிரிவிற்கான கலந்தாய்வு நவம்பர் 19 முதல் 20 வரை இணையதளம் வாயிலாக நடைபெறும்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். கல்லூரிகளில் கூடுதல் இடங்களை அதிகரிப்பது குறித்து 30 ஆம் தேதி மாலை அறிவிக்கப்படும்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படும். மேலும் பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் தமிழ் வழியில் பாடங்களை படிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பொறியியல் வகுப்புகள் தொடங்குவது குறித்து செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.














