ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, டெட் முதல் தாள் தேர்வுக்கு 2,30,878 பேர் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து அக்டோபர் 14 முதல் 19-ம் தேதி வரை காலை, மாலை இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 1,53,533 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. இதைத் தேர்வு வாரியத்தின் www.trb.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து டெட் இரண்டாம் தாளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.