புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி துவங்கியது. 22ம் தேதியன்று நடப்பு 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பின், ஆகஸ்ட் 30ம் தேதியன்று பட்ஜெட் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை விதிகளின்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9:30 மணிக்கு கூடுகிறது.
சபை கூடியதும் இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் செல்வம் வாசிக்கிறார். அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர். இதையடுத்து 2022-23ம் ஆண்டுக்கான அரசு துறைகளின் கூடுதல் செலவினங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. துணை கொடைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. பின் சபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட உள்ளது. மேலும் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் கூடுகிறது. அப்போது 2023-24ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.