மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதன் பிரதிபலிப்பே நாட்டுப்புறக் கலைகளாகும். தனது வாழ்வில் மனிதன் எதனைக் கண்டு அச்சப்படத் தொடங்கினானோ அவற்றையும், தமக்குப் பயன்தரக்கூடிய வற்றையும் வழிபடத் தொடங்கினான். அவ்வகையில் தொடக்க கால மக்கள் புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் வலிமையும் சீற்றத்தையும் கண்டு அஞ்சியும் வியந்தும் அவற்றைத் தெய்வங்களாக எண்ணி வழிபடத் தொடங்கினர். இதன் வழியாகத் தோன்றியதே புலி வேடமணிந்து ஆடும் புலியாட்டம் என்ற நாட்டுப்புறக் கலையாகும்.
புலியாட்டம் சாதி, சமய, இன, மொழி எல்லை ஆகியவற்றைக் கடந்து ஆடப்படும் ஆட்டமாகும். தேரோட்டம், ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போல் வேடமிட்டு ஆட, மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடும் வழக்கமும், இரண்டு பேர் புலி வேடம் பூண்டு, புலி மற்றும் எதிர் புலியாகப் பாவித்துக் கொண்டு ஆடும் வழக்கமும் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
புலியின் இயக்கங்களை நன்கு உள்வாங்கி கொண்டு, உடல் அசைவுகளின் மூலம் புலியைப் பார்வையாளர்களின் கண் முன்னே கொண்டு வருவதே புலியாட்டத்தின் சிறப்பாகும். புலிகளுக்கு இடையே சண்டையிடல், சேட்டை பண்ணுதல், ஆட்டைக் கண்டால் பதுங்குதல், பாய்ந்து செல்லுதல், தாக்குதல், உறுமுதல் போன்ற செயல்களைப் புலியாட்டத்தில் நடித்துக் காட்டுவர். அதோடு, தரையோடு தரையாக பதுங்குவது, ஒளிவது, உடம்பையும் பாதங்களையும் நக்குவது போன்ற அசைவுகளை மேலத்தாளத்திற்கு ஏற்ப செய்து காட்டுவார்கள். இவற்றோடு சேர்த்து சில சாகசங்களைச் செய்து காட்டுவதும் தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, சிலம்பாட்டம் ஆடல், பந்தங்கள் சுழற்றி ஆடுதல் போன்ற கூடுதல் சாகசங்கள் புலியாட்டத்தின் பகுதியாக நிகழ்த்தப்படுகின்றன. மேலும், புலியாட்டத்தின் ஊடாக கரடி ஆட்டம், கிளி ஆட்டம் போன்றவையும் ஆடப்படுகின்றன.
புலி ஆட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம், கேரளம், ஆந்திரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது. வேலூர் பகுதியில் புலிவேடமிட்டு குச்சி சுழற்றி விளையாடுவது ‘தாளம்’ என்ற சொல்லால் அறியப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பேச்சு வழக்கில் புலியைக் ‘கடுவா’ என்றும் புலியாட்டத்தைக் ‘கடுவா ஆட்டம்’ என்றும் அழைக்கின்றனர். பொதுவாக, புலியாட்டம் உருமி நையாண்டி மேளத்துடன் ஆடப் படும். மண்ணால் சட்டி போல் செய்து, ஆடு அல்லது எருமைக் கன்றின் தோலால் மூடி இறுகக் கட்டப்பட்ட சிறுபறை ‘தாசா சட்டி’ எனப்படுகிறது. இதுவே, தஞ்சைப் பகுதிகளில் புலியாட்டத்திற்கான முதன்மையான இசைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
புலியாட்டம் ஆடுவோருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. மேலும் அதன் ஒப்பனை முறைகளும் தனித்துவமாகப் பின்பற்றப்படுகின்றன. முன்னதாக, புலிவேடம் போட நாமக்கட்டியை நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்வார்கள். அது உலர்ந்தபின் அதன் மேல் வண்ணங்களைப் பூசுவர். வேறு சிலர், முதல் நாள் வடித்த அரிசிக்கஞ்சியில் கருவேல மரப்பிசினை கலந்து ஊறவைத்து அதில் வண்ணங்களைக் குழைத்து பூசிக்கொள்வர். இந்த ஒப்பணை மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணத்தில் செய்யப்பட்டு, உண்மையான புலியைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதாக இருக்கும்.
புலியாட்டம் என்பது முற்காலத்தில் மிகவும் மதிக்கப்பட்ட வீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. எனவே தான் சில தலைமுறைக்கு முன்னர் வரை, தமிழனின் தற்காப்புக் கலைகளான களரி, மல்யுத்தம், சிலம்பம், வர்மம் போன்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவரே புலி வேசம் கட்டி ஆடுவர். இவ்வாறு, ஆடி வரும் பொழுதில், எவரேனும் போட்டிக்கு அழைத்தால் அந்தப் போட்டியில் வெற்றி அடைய வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளும் இருந்தன. அந்த மரபில் வந்ததாலேயே ஒன்று முதல் நான்கு வரை உள்ள சிலம்பாட்ட அடிகள் மற்றும் அதற்குரிய பக்க இசை ஆகியன அப்படியே புலியாட்டத்தில் இன்றும் இடம் பெறுகின்றன. மேலும், புலியின் மிக மெதுவான பம்முதலும் மிக விரைந்த பாய்ச்சலும் சிலம்பாட்டத்தின் கால் வைப்பு முறைகளைப் பிரதிபலிக்கின்றன. புலிவேடம் போடும் கலைஞர்களில் சிலர் இரட்டைவால் கட்டும் பழக்கம் தென் தமிழகத்தில் இருந்துள்ளது. ஒருவர் இரட்டை வால் கட்டினால் தன்னை எதிர்க்க யாருமில்லை என்று சவால் விடுவதாக பொருள். இரட்டை வால் கட்டி வருவோருக்கு பல சோதனைகள் வைக்கப்பட்டு, அவற்றில் வெற்றி பெறுபவரே இரட்டைவால் கட்டத் தகுதியுடையவர்கள் என ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.
இவ்வாறு புலியாட்டம் என்பது வீரத்தின் அடையாளக் கலையாக இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில், வீரம் என்பது மறக்கப்பட்டு, புலியாட்டம் என்பது வெறும் வேசம் கட்டி வேடிக்கை காட்டும் ஆட்டமாக மாறிவிட்டது. எனவே, புலியாட்டத்தையும், புலியாட்டக் கலைஞர்களையும் அழிவிலிருந்து மீட்க வேண்டியது நம் கட்டாயக் கடமைகளில் ஒன்றாகும்.