ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கான சிறப்பு ரயில் மே 4-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல். சுப்பிரமணி ஆகியோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 4 குளிர்சாதனப் பெட்டிகள், 7 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. இதில் 752 பேர் பயணிக்க முடியும். இந்த சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், தென் மண்டலம் சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது.
மே 4-ம் தேதி தொடங்கி 12 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில் பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி மற்றும் அலகாபாத் உள்ளிட்ட இடங்களை பார்வையிடலாம். இந்த யாத்திரையின்போது பயணிகள் தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதி, பாதுகாவலர் வசதி, சுற்றுலா வழிகாட்டி வசதி உள்ளிட்டவை ஐஆர்சிடிசி சார்பில் வழங்கப்படும். இதற்கான கட்டணமாக ஒரு நபரின் ஏ.சி பயணத்துக்கு ரூ.35,651-ம், ஏசி அல்லாத பயணத்துக்கு ரூ.20,367-ம் வசூலிக்கப்படுகிறது.