பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு கணிப்புகளை தாண்டி மிகப்பெரிய முன்னேற்றத்தை வங்கி பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 3.36% உயர்ந்து வர்த்தகம் ஆகின.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் 9923 கோடி ஆகும். இது வருடாந்திர அடிப்படையில் 20% மற்றும் காலாண்டு அடிப்படையில் 4.4% உயர்வாகும். முக்கியமாக, வங்கியின் லாப உயர்வு 1756 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 14 காலாண்டுகளில் பதிவாகும் மிக உயர்வான லாபம் ஆகும். இது வருடாந்திர அடிப்படையில் 327% உயர்வாகும். கடன் வழங்கல் துறையில், வங்கி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன் வழங்கல் 13.7%, வாகன கடன் வழங்கல் 28.3%, தனிநபர் கடன் வழங்கல் 39% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், கடன் வழங்கல் துறையில் 40.42% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.