இந்திய கடற்படை போர்கப்பல்களில் பதவி வகித்த கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கமாண்டர் அமித் நாக்பால், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புமேந்து திவாரி, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் சுகுணாகர் பகாலா, மற்றும் அதிகாரி ராகேஷ் எனும் 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள்,
அரபு நாடான கத்தாரின் தலைநகர் தோகாவில் தகரா குளோபல் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்கள் எட்டு பேரும் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகள் குறித்து அந்நிறுவனத்தில் முக்கிய பங்கு ஆற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் கத்தார் அரசு இவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சரியான தகவல்களை அந்நாட்டு அரசு அளிக்கவில்லை. அதோடு இவர்களின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர்களுடைய சிறைவாசம் தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது. கடந்த மார்ச் 2023 இவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தி தற்போது கத்தார் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் 'இந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்தவுடன் கத்தார் அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசுவோம். இந்த வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். அந்த அதிகாரிகளை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.