கத்தார் முதலீட்டு ஆணையம் இந்தியாவில் அலுவலகத்தை அமைத்து, 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கத்தார் நாட்டு தலைவர் ஷேக் தமீம் பின் அமத் அல் தானி அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். இது அவருடைய இரண்டாவது இந்திய பயணமாகும். அவரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் நேரடியாக வரவேற்றார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்தித்து, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதில், கத்தார் முதலீட்டு ஆணையத்தின் அலுவலகத்தை இந்தியாவில் அமைக்கும் திட்டமும் அடங்கும். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு, கத்தார் முதலீட்டு ஆணையம் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது 526 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை மேலாண்மை செய்கிறது. பார்க்லேஸ் வங்கி, ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் போன்ற உலகளாவிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள இந்த அமைப்பு, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை முடித்து, விரைவில் திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடி மற்றும் ஷேக் தமீம் இடையிலான சந்திப்பில், எதிர்காலத்தில் இருநாடுகளுக்கிடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த முதலீடு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்பதால், இந்திய அரசு இதை வரவேற்றுள்ளது.