வரும் டிசம்பர் மாதம் முதல், குறுகலான தண்டவாளங்களில் இயக்கப்படும் பாரம்பரிய ரயில்கள், பசுமையான முறைக்கு மாற்றப்படும். அதாவது, ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதைப் போன்று இந்தியாவிலும் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார். மேலும், “சோதனை முயற்சியாக வடக்கு ரயில்வேயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் மாதிரி உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஹரியானா மாநிலத்தின் சோனிபட் - ஜிந்த் இடையே சோதனை செய்யப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படும் என்பதை விட, பாரம்பரிய வழித்தடங்கள் பசுமை வழித்தடங்களாக மாற்றப்படும் என்பதே பொருத்தமானது. இந்தியாவின் பாரம்பரிய ரயில் வழித்தடங்கள் டீசல் ரயில்கள் மூலம் இயக்கப்படுகின்றன. அவற்றை பசுமை எரிசக்திக்கு மாற்றும் முயற்சியாக இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது” என்று கூறினார்.