கடந்த இரு தினங்களாக, வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள அபாயம் தொடர்கிறது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கங்கை மற்றும் யமுனை நதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ள அபாய எல்லையை தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த இரு தினங்களில் பெய்த கனமழை காரணமாக,பல்வேறு இடங்களில், நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, சாலை பழுது ஆகியவை நேர்ந்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளப்பெருக்கு காரணமாக எண்ணற்ற மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். பெரும்பாலானோருக்கு மாநில அரசு உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோல், அசாம் மாநிலத்தில் 40000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்கள் மற்றும் எண்ணற்ற கால்நடைகள் வெள்ளத்தில் பறிபோய் உள்ளதாக கூறப்படுகிறது.