ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள ஹர்சவா என்ற கிராமத்தில், ஹெஸ் தனியார் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி கிளையில் இன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெடிகுண்டுடன் நுழைந்து, 24 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த வங்கி கொள்ளைச் சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வங்கி ஊழியர்களை பணம் தருமாறு வற்புறுத்தி உள்ளனர். பணம் தரவில்லை என்றால் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதாக கூறி மிரட்டி உள்ளனர். பின்னர், ஊழியர்கள் கொடுத்த பணத்துடன், காசாளர் அறைக்குள் நுழைந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்த பையில் பணத்தை நிரப்பி கொண்டு, வங்கியின் வாசல் கதவை பூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது, வங்கி வளாகத்திற்குள் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. வங்கி அமைந்துள்ள பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.














