அயோத்தியில் ஜனவரி.24-ந்தேதி ராமர் கோவில் திறக்க வாய்ப்புள்ளதாக கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தி பண்டிகை அன்று கோவிலில் குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளைத் தொடங்க கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஜனவரி 14 முதல் 24-ந் தேதி வரை சிலை பிரதிஷ்டைக்கான 10 நாள் சடங்கு நடைபெறும். பின்னர் ஜனவரி 24-ந்தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். ஜனவரி 22-ந்தேதி குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படலாம். இந்த நிகழ்ச்சிக்கு கோவில் அறக்கட்டளை அதிகாரிகள் பிரதமர் மோடியை அழைப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.