இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடல் அலைகள் இல்லாத ராமேஸ்வரம் தீவில், ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாகவும் கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால் அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே ராமேசுவரமும் தனுஷ்கோடியும் இருப்பது கழுகு பார்வையில் தெரியும். இத்தகையக் கடலின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்தின் வழியாக மட்டுமே செல்ல முடியும். எந்த விதமான போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலத்தில், ஒரு மணற்பாங்கானத் தீவில், கல்லால் […]

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடல் அலைகள் இல்லாத ராமேஸ்வரம் தீவில், ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாகவும் கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால் அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே ராமேசுவரமும் தனுஷ்கோடியும் இருப்பது கழுகு பார்வையில் தெரியும். இத்தகையக் கடலின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்தின் வழியாக மட்டுமே செல்ல முடியும். எந்த விதமான போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலத்தில், ஒரு மணற்பாங்கானத் தீவில், கல்லால் ஆன மிகப்பெரும் ஆலயத்தை எவ்வாறு கட்டியிருப்பார்கள் என்பதே மிகவும் வியப்புக்குரியதாகும். இராமேஸ்வரம் கோவிலில் இது போன்று பல சிறப்புகள் உள்ளன. அவற்றுள் சில:

1.பிரகாரங்கள்

இராமேஸ்வரம் கோவிலின் அடையாளமாக மூன்றாம் பிரகாரம் பார்க்கப்படுகிறது. ஆசியாவின் மிக நீளமான பிரகாரமும், உலகின் மூன்றாவது பெரிய பிரகாரமான இது, முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் கட்டப்பட்டதாகும். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம், 22½ அடி உயரம் கொண்டதாகும். இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். மேலும், கோவிலின் உட்பிரகாரங்களும் மிகவும் பெரிதாக அமைந்துள்ளன. கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாகும். அவற்றின் அகலம் 15½ அடி முதல் 17 அடி வரையுள்ளது. காண்போரை பிரமிக்கச் செய்யும் இந்தக் கோவிலின் பிரகாரங்களின் மொத்த நீளம் மட்டுமே 3850 அடி ஆகும். இக்காலத்தைப் போல போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லாத காலத்தில், வெளியிடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்து, ஒரு தீவுப்பகுதியில் இக்கோவிலை நம் முன்னோர்கள் எவ்வாறு எழுப்பினார்கள் என்பது பெரும் வியப்பாக உள்ளது.

2.கோபுரங்கள்

இராமேஸ்வரம் கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டுள்ளப் பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலில் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு கோபுரங்கள் உள்ளன. பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் கோபுரத்தின் நிலை மற்றும் மேல்தளம் வரையில் மட்டுமே கருங்கல்லாக இருப்பது வழக்கம். ஆனால், இராமேஸ்வரம் கோவிலில் கலசம் வரையிலும் கருங்கல்லால் கோபுரத்தைக் கட்டியது தனிச்சிறப்பாகும். 78 அடி உயரமான மேற்குக் கோபுரம், இராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதியால் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிழக்குக் கோபுரம் 1649-ல் மன்னர் சேதுபதியால் தொடங்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டதால், 1879 முதல் 1904 வரை தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். செட்டியார் இந்தக் கோபுரத்தைக் கட்டியுள்ளார். 128 அடி உயரமான இந்தக் கருங்கல் கோபுரம் இலங்கையிலிருந்துப் பார்த்தாலும் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பாகும்.

3.லிங்கங்கள்

இந்தக் கோவிலில் உள்ள மூல லிங்கம் மணலால் ஆனதாகும். ஆனால், அது தண்ணீரில் கரையாமல் இருக்கிறது. மேலும், பாஸ்கரராயர் என்ற பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்துள்ளார். கோவிலில் உள்ள இந்த இரண்டு லிங்கங்களும் தண்ணீரில் கரையாமல் இருப்பது அற்புதமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட வைணலிங்கமும் இந்தக் கோவிலில் காணப்படுகிறது.

4.புனித யாத்திரை

ஒவ்வொரு சமயத்திலும் புனித யாத்திரை என்ற வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்துக்களின் புனித யாத்திரையாக, “காசி-ராமேஸ்வரம்” யாத்திரைக் கருதப்படுகிறது. வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை இணைக்கும் விதமாக இந்த யாத்திரை திகழ்கிறது. இந்தப் புனித யாத்திரை, 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் திகழும் ராமேஸ்வரத்தில் தொடங்கி, காசி சென்று, இறுதியில் ராமேஸ்வரத்தில் முடிவதாக அமைகிறது. எனவே, ராமேஸ்வரம் வருடந்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வழிபடும் கோவிலாக இருக்கிறது.

5.கோவில் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளும்

கி.பி. 12-ம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரமபாகு இக்கோவிலை மேம்படுத்திக் கட்டியுள்ளது கல்வெட்டுகளின் மூலமாக உறுதியாகியுள்ளது. சோழ ஆர்ப்பாக்கம் கல்வெட்டு சிங்கள மன்னர் பராக்கிரமபாகுவின் தளபதி இலங்காபுர தண்ட நாயகனால் கோயில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறுகிறது. கல்வெட்டுகள் மட்டுமின்றி பல நூல்களில் இந்தக் கோவிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக, பெரிய புராணத்தில், கி.பி. 7ஆம் நூற்றாண்டில், நின்றசேர் நெடுமாறன் இங்கு வந்து வழிபட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி.907-953) இராமேசுவரத்திற்கு வந்து எடைக்கு எடை நாணயம் கொடுத்ததாக வேளஞ்சேரி செப்புப் பட்டயம் சொல்கிறது. இந்தக் கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் மூலம், இலங்கைக்கும் தமிழகத்திற்குமானத் தொடர்புகள், ராமநாதபுரம் அரசர்களின் வரலாறு ஆகியவற்றை அறிய முடிகிறது.

6.சிற்பங்கள்

ராமேஸ்வரம் கோவிலில் மொத்தம் 381 விக்கிரகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் கலைநயம் மிக்க சிற்பங்களாகும். எடுத்துக்காட்டகச் சில:

  • இக்கோவிலிலுள்ள 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் கொண்ட, சுதையினாலான பெரிய நந்தி, அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.
  • மூன்றாம் பிரகாரத்தில், சீதை மணலில் லிங்கம் பிடிக்க, அதற்கு இராமர் பூஜை செய்யும் காட்சி தத்ரூபமான சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
  • உலோகத்தினால் செய்யப்பட்ட குதிரைச்சொக்கர் உருவம் மிகவும் கம்பீரமாக, கலைத்திறன் மிக்கதாகக் காணப்படுகிறது.
  • ராமேசுவரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளை கொண்ட ‘திரிசங்கு’ உள்ளது.

7.ராமாயணத் திருவிழா 

இராமேஸ்வரம் கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழா ஆனிமாதத்தில் நடைபெறும் இராமலிங்க பிரதிஷ்டை விழாவாகும். ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் இவ்விழாவில் நடக்கும். இது போன்ற விழா தமிழகத்தில் வேறெங்கும் நடப்பதில்லை என்பதே இதன் சிறப்பாகும்.

8.தனிச் சிறப்புகள்

  • ராமேஸ்வரம் கோவிலுக்கு 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் விவேகானந்தர் வந்துள்ளார். அப்போது அவர் “அன்புதான் சமயம்” என்பதை வலியுறுத்தும் விதமாகப் பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
  • 1693-ல் அரசியல் காரணங்களுக்காக, ராமேஸ்வரம் கோவிலைத் தகர்க்க முயன்ற போது, சுமார் 30000 தமிழர்கள் வெகுண்டெழுந்து கோவிலைக் காப்பாற்றியுள்ளார்கள். இது அப்போதையக் காலத்தில் நிகழ்ந்த பெரும் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.
  • இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் சி.வி.மாவ்லங்கர் ராமேசுவரம் கோவில் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவும் சாதனம் எனக் கூறியது கோவில் குறிப்பேடுகளில் காணப்படுகிறது.
  • 1935ல், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளிவிழா ஆண்டில் ராமேசுவரம் கோவில் இந்திய அஞ்சல் தலைகளில் பொறிக்கப் பெற்றது.

இவ்வாறு, பல சிறப்புகள் கொண்ட இந்தக் கோவில், உண்மையில் தீவு நகரத்தில் அமைந்த அதிசயமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu