எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தனர். மொத்தம் 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்திருந்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டில் மதுரையைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார். 7.5% சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஈரோடு மாவட்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி தேவதர்சினி 518 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்காக 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.