கொரோனா பெருந்தொற்று காலத்தில், அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்காக பி.எம். கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டது. இந்த நிதிக்கு நன்கொடை வழங்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். இதில் செலுத்தப்படும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பெயரில், பல கோடி ரூபாய் இதில் திரண்டது. இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா, கே.டி.தாமஸ் மற்றும் கரிய முன்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தற்போது அறிவித்துள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முன்டா ஆகியோர் மக்களிடம் நன் மதிப்பை பெற்றவர் ஆவர். இவர்களின் நியமனம் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களுடன் சேர்த்து, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, டெக் ஃபார் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோரும் பி.எம். கேர்ஸ் நிதியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற பி.எம். கேர்ஸ் நிதி கூட்டத்தில், இவர்கள் அனைவரும் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் இதில் பங்கு பெற்றனர். அதன் பின்னர், இந்தக் கூட்டம் தொடர்பான செய்திக் குறிப்பு வெளியானது. அதில், பி.எம். கேர்ஸ் நிதியின் தொலைநோக்கு திட்டம், பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கால உதவி மற்றும் தொடர் செயல் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி, பி.எம். கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் எனும் திட்டம் பி.எம். கேர்ஸ் சார்பில் கொண்டுவரப் பட்டது. இதன் மூலம், கொரோனாவால் பெற்றோரை இழந்த 4,345 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்த நிதி மூலம், பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














