மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கபோல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இந்த வங்கியில், போதிய அளவு மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கபோல் வங்கி, வங்கிச் செயல்பாடுகளில் ஈடுபட உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது. கபோல் கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் கலக்கமடைந்துள்ளனர். அதனால், அவர்களுக்கான முறையான தீர்வுகளை மத்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. அதன்படி, வங்கியில் வைப்பு வைத்திருந்தோர் அதற்கான இழப்பீடு மற்றும் காப்பீடு தொகைகளை பெறுவர் என தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 96.09% பயனர்களுக்கு, அவர்களின் முழுமையான தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது. வங்கியில் வைப்பு வைத்திருந்தவர்களுக்கு அவர்களது பணத்தை முழுமையாக செலுத்தும் திறன் கபோல் வங்கியிடம் இல்லை. எனவே, காப்பீடு மற்றும் உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு முழுத் தொகை திருப்பி செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.