ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இன்று தில்லியில் நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது முறையாக, ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிதி கொள்கை கமிட்டி சந்திப்பு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சக்தி காந்த தாஸ், “இந்தியாவில் சில்லறை பணவீக்கம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். அதே வேளையில், இந்தியா, உலக வளர்ச்சியில் 15% பங்களிப்பை கொண்டுள்ளது. மேலும், இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை பதிவு செய்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.