அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில், மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனா பாதிப்புக்கு எதிராக குறைந்தது ஒரு டோஸ் எடுத்து கொண்டுள்ளனர். எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பூஸ்டர் டோசை, தகுதி வாய்ந்த 16 சதவீதம் பேரே இதுவரை எடுத்து கொண்டுள்ளனர் என தெரிய வந்து உள்ளது. இந்த விகித வேற்றுமை மற்றும் கொரோனா பாதிப்பு, பரவல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அரசுக்கு சில விசயங்களை பரிந்துரைத்து உள்ளது.
இதன்படி, உருமாறி வரும் கொரோனா பாதிப்பில் இருந்து முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தப்பித்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை கொரோனா பூஸ்டர் டோசை செலுத்த ஒப்புதல் அளிக்கும்படி பரிந்துரை தெரிவித்து உள்ளது. இதனால், எத்தனை தடுப்பூசி டோஸ்களை இதுவரை மக்கள் எடுத்துள்ளனர் என்றோ மற்றும் கடைசி தடுப்பூசி டோசுக்கு பின் எத்தனை மாத இடைவெளியில் மக்கள் அடுத்த பூஸ்டர் டோசை எடுத்து கொள்கின்றனர் என்றோ கணக்கு வைத்து கொள்ள வேண்டிய அவசியம் அமெரிக்கர்களுக்கு இருக்காது. இந்த பரிந்துரையின்படி, இனி ஆண்டுதோறும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளுக்கு மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது போன்று கொரோனா தடுப்பூசிகளை மக்கள் எடுத்து கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.