கடந்த 15 மாதங்களில் கோவில்களுக்கு சொந்தமான 3566 கோடி ரூபாய் மதிப்புள்ள 2710 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹிந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சட்டசபை அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வுகூட்டம் நேற்று நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த 15 மாதங்களில் 310 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. 3118 ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி 2710 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சொத்துக்கள் கோவில் பயன்பாட்டில் இல்லாத இடம், காலிமனை, கட்டடங்களை வருவாய் ஈட்டும் வகையில் வாடகை அல்லது குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அதோடு, 48 முதல் நிலை கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டது. 12 அம்மன் கோவில்களில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கிற திருவிளக்கு பூஜை நடந்து வருகிறது. மகாசிவராத்திரி விழா சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவை பட்டீஸ்வரர் தஞ்சை பெரிய கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்களில் இந்தாண்டு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.