வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் அயலக தமிழர்களுக்கான துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் கடந்த 3-ம் தேதி குவைத் சென்றார். இவர் 9-ம் தேதி மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து முத்துக்குமரன் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி வித்யா கோரிக்கை வைத்திருந்தார். இதன்படி முத்துக்குமரன் உடல் இன்று தமிழகம் வந்தது. விமானம் மூலம் திருச்சி வந்த அவரது உடலுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், வெளிநாட்டில் வேலைக்கு சென்று உயிரிழப்பவர்கள் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.
இந்த துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வெளிநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும், இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.