இ - அலுவலகம் வாயிலாக மொத்தம் 1.5 லட்சம் கோப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கம் சார்பில் அரசு அலுவலகங்களுக்கு இ - அலுவலக வசதி வடிவமைத்து தரப்பட்டது. இந்த வசதியை ஜூனில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன் வாயிலாக, தலைமை செயலகத்தில் 50 ஆயிரம் கோப்புகள்; மாவட்ட கலெக்டர்கள் அலுவலகம் மற்றும் துணை அரசு அலுவலகங்களில் 1 லட்சம் கோப்புகள் என 1.50 லட்சம் கோப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இ - அலுவலகம் செயல்பாட்டுக்கு வரும் முன், கட்டு கட்டான காகிதங்களில் கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகம், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு நிறைய பணியாட்கள் தேவைப்பட்டனர். இதனால், பொது மக்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இ - அலுவலக மாற்றத்திற்கு பின், நேரம், பணம், மனித வளம் ஆகியவை சேமிக்கப்பட்டு மக்களுக்கு விரைவான சேவை வழங்க முடிகிறது. இ - அலுவலக வசதி, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.