நெல் கொள்முதல் விதிகளில் உரிய தளர்வுகளை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசின் நடவடிக்கைகளால் நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்து குறுவைப் பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்து, சாதனை படைக்கப்பட்டு, மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சம்பா, நவரை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரியில் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பருவம் தவறி மழை பெய்தது. இதனால் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பருவம் தவறி மழை பெய்துள்ளதால் கொள்முதல் ஈரப்பதத்தில் தளர்வு தேவைப்படுகிறது. அதன் மூலம் நெல் கொள்முதல் பணிகளை சீராக மேற்கொள்ள இயலும். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரையும், சேதமடைந்த, நிறமாற்றம் அடைந்த மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரையும் தளர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.