தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என ஜனவரி 2ஆம் தேதி அறிவிப்பு வெளியாகியது. மேலும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் அனைத்து மாவட்டங்களுக்கும் அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒன்றிய,மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் ரொக்கமாக பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகை இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்னதாக 10ம் தேதியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.