முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்த நிலையில், சமீப காலமாக சரிவை சந்தித்து வருகிறது. திங்கள் கிழமையின் சந்தை நிலவரம் காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உச்சப்பட்ச பங்கு விலையில் இருந்து 17.33% குறைந்து, நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகம் ஆனது. கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, மும்பை பங்குச் சந்தையில், 2855 ரூபாய்க்கு வர்த்தகமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை, நேற்றைய தினம் 2360 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது.
கடந்த ஒரு வருடத்தில், 12.4 சதவீதம் பங்கு மதிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் இழந்துள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 0.13% பங்கு மதிப்பை இழந்துள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான 0.78 லட்சம் பங்குகள் கை மாறி உள்ளன. இதனால் நிறுவனத்தின் டர்ன் ஓவர் 18.36 கோடியாக நேற்றைய தினம் பதிவானது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 16.01 லட்சம் கோடியாக இருந்தது. நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைவால், நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு இது சரியான நேரமா என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் இது தொடர்பாக கருத்து கூறி வருகிறார்கள்.