இந்தியாவில் எண்ணெய் வணிகத்தில் தொடங்கி தொலை தொடர்பு சேவைகள் வணிகம் வரை இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தற்போது சலூன் வணிகத்தில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, நேச்சுரல்ஸ் சலூன் மற்றும் ஸ்பா நிறுவனத்தின் 49% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் மற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனத்தை இயக்கி வரும் குரூம் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் லாக்மி மற்றும் என்ட்ரிச், கீதாஞ்சலி போன்ற பிற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு போட்டியாளராக ரிலையன்ஸ் நிறுவனம் மாறும்.
சலூன் வணிகம், கொரோனா பரவலின் போது தீவிர பாதிப்புக்கு உள்ளானது. எனவே, இந்த துறையில், தொடர் வணிகத்தில் ஈடுபட, நிதி உதவிகள் அளிக்குமாறு அரசாங்கத்திடம் குரும் இந்தியா நிறுவனம் உதவி கோரியது. அதனை அடுத்து, இந்த ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து பேசிய நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சி கே குமரவேல், “இந்த ஒப்பந்தத்திற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலின் போது எங்கள் வணிகம் தீவிரமாக பாதிப்படைந்தது உண்மை. ஆனால், கடந்த ஏழு மாதங்களாக எங்கள் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. எனவே எங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு கொரோனா காரணம் அல்ல” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், நேச்சுரல்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் 700 கடைகள் செயல்பட்டு வருகின்றன. வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 3000 கடைகளை திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் நிதி, நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் கிளைகள் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “இந்த கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னால் ஊடகங்களின் வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.