வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தவுபிக் அல் ரபியா கூறியதாவது:- இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது. வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.