பறக்கும் ரெயிலை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கினால் எளிதாக இருக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக சேப்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், சேப்பாக்கத்துக்கு பதிலாக பறக்கும் ரெயிலை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கினால் பயணிகளுக்கு எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.