கோவையில் 300 கிலோ எடையுள்ள வெண்கல முருகர் சிலை மீட்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர், வீட்டில் ஜோதிடம், மாந்திரீக பூஜைகள் செய்து வந்தார். இவர் சுவாமி சிலைகள் உரிய அனுமதியின்றி செய்து விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது 4 அடி உயரத்தில் 300 கிலோ எடையில் இருந்த இந்த சிலை, வெண்கலத்தில் செய்திருப்பதாக தெரிகிறது. சிலை பீடம் மற்றும் தாங்கும் பகுதி 100 கிலோ எடையில் இருந்தது. இந்த சிலையை விற்பனை செய்ய இவர் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐம்பொன் எனக்கூறி சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இவர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து காவல்துறையினர் சிலையை மீட்டனர். மேலும் அனுமதியின்றி சிலையை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.