சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனவரி 14, 15ம் தேதிகளில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க கேரளா அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜைக்காக ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாள் விடுமுறை மற்றும் அடுத்த பத்து நாட்கள் மகர விளக்கு சீசன் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கருதி தரிசனத்திற்காக உடனடி முன்பதிவு வசதி புதன்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சபரிமலைக்கு தரிசனத்திற்கு செல்ல வேண்டாம் என கேரளா அரசு கேட்டு கொண்டுள்ளது. மேலும் விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 16 முதல் 20-ம் தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.