ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அலோக் அகர்வால், தனது 2.25 லட்சம் பங்குகளை விற்பதாகவும், 1.25 லட்சம் பங்குகளை பரிசாக வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். நிறுவனத்தின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வர்த்தகத் திட்டத்தில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இது தொடர்பான வர்த்தகத்தில் அலோக் அகர்வால் ஈடுபடுவார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மே 10ம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, 1.25 லட்சம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை, அவர் பரிசாக வழங்க உள்ளார். அத்துடன், ஒரு லட்சம் பங்குகளை விற்க உள்ளார். ஆனால், அவர் யாருக்கு பங்குகளை வழங்க உள்ளார் என்பது குறித்த விவரங்கள் அதில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, 1.25 லட்சம் ரிலையன்ஸ் பங்குகளை அவர் விற்க உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 4% உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அலோக் அகர்வாலின் பங்கு விற்பனை பங்குச் சந்தை நடவடிக்கைகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.