கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இது போன்ற வளைய சூரிய கிரகணம் மீண்டும் 2039 ஆம் ஆண்டு தான் நிகழும் என சொல்லப்பட்டது. எனவே, இது மிக முக்கிய கிரகணமாக கருதப்பட்டது. அந்த வகையில், வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்த போது, விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய பகுதிகளில் இந்த வளைய சூரிய கிரகணம் தென்பட்டது. தற்போது, நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தில் நிழல் உருவாகி, டெக்சாஸ் நகரின் தென்கிழக்கு பகுதியில் விழுந்துள்ளது. சூரியன் மற்றும் பூமிக்கு இடையே, நிலவு சரியாக நேர்கோட்டில் வந்த போது அதன் நிழல் பூமியில் விழுந்து இந்த கிரகணம் ஏற்பட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த புகைப்படத்தில், கிரகணம் மிகவும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள எல் 1 பகுதியில் நிறுவப்பட்டுள்ள நாசாவின் எபிக் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.